Monday, February 9, 2009

நான் கடவுள் - அஹம் பிரம்மாஸ்மி

சனிக்கிழமை இரவு நான் கடவுள் படம் போவதாக நண்பர்கள் குழாம் முடிவெடுத்தது. சரியென மனைவி மக்களை எல்லாம் வீட்டில் விட்டு விட்டு (நல்ல வேளை) நண்பர்களுடன் படத்துக்கு போயாகி விட்டது. அவ்வளவாக கூட்டமும் இல்லை திரையரங்கில்.


இதோ கதைச் சுருக்கம்.

தன் குழந்தையின் ஜாதகப்படி 14 வருடங்கள் குழந்தையின் முகம் பாராமல் இருப்பது குடும்பத்துக்கு நல்லது என்பதால் 14 வருடங்களாக காசியில் அனாதையாக விடப்படும் ஆர்யா அங்கே ருத்ரன் என்னும் அகோரி சாமியாராக உருவெடுக்கிறார். அகோரிகளின் தாத்பர்யம் நானே பிரம்மா, நானே விஷ்ணு, நானே கடவுள். இவர்கள் எரியும் சிதைக்கருகே நின்று ஆசீர்வதித்தால் மறுபிறவி கிடையாது எனும் இந்துத்துவ நம்பிக்கை. அதே போல அகோரிகளுக்கு தீயவற்றை கண்டறியும் சக்தியும் உண்டு.

பதினாலு வருடங்கள் கழித்து மனச் சாட்சி உறுத்துவதாலோ இல்லை மனைவியின் அரற்றல் தாங்காமலோ மகனை தேடி காசி வரும் தகப்பன், ஆயிரமாயிரம் சந்நியாசிகளுக்கு நடுவே ஒரு முறை பார்த்தத்தும் மகனை அடையாளம் காண்கிறார் தந்தை. தலை நிறைய, முகம் நிறைய முடியுடன் ஆர்யாவை பார்வையாளர்களான நமக்கே அடையாளம் தெரிவது கஷ்டமாக இருக்கும் போது இடுகாட்டு சாம்பலை முகம் உடல் முழுக்க பூசிய நிலையில் மகனை தந்தை அடையாளம் காணுகிறாராம்.

அதை அடுத்து மகனை தென் தமிழகத்தில் இருக்கும் மலைக்கோவிலுக்கு அழைத்து வருகிறார் தந்தை. மலைக்கோவிலில் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்கும் தாயிடம் கஞ்சா இருக்கா எனக் கேட்டு அதிர வைக்கிறது நம்ம அகோரி சாமி. வீட்டுக்கு வந்தாலும் மனம் ஒன்றாது கோவிலில் போய் கஞ்சா அடித்துக் கொண்டு ஏதேதோ சம்ஸ்கிருத மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்து கொண்டு செட்டில் ஆகிறது அகோரி ஆர்யா சாமி.

அதே மலைக்கோவிலில் இருக்கும் ஒரு பாழடைந்த தரைக்கடியில் இருக்கும் ஒரு கோவில் மண்டபத்துக்குள் விரிகிறது படம். மண்டபம் முழுக்க கால் ஊனம், கை ஊனம், மன வளர்ச்சி இல்லாத, வயதான, அகோரமான என கடவுளால் பழிக்கப்பட்டு பிறந்த பல மக்களை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் செய்யும் ஈவு இரக்கமே இல்லாத ஒரு முதலாளி தாண்டவன். அவனுக்கு உதவியாக முருகன் என்னும் ஒருவன். ஊனமுற்றவர்களை மனிதர்களாக கூட கருதாமல் உருப்படிகளாக கருதி, அவர்கள் பிச்சைக் காசை எடை போட்டு எடுத்து லாபம் காணும் அந்த சில கணங்கள் கொடூரம். கர்ண கொடூரம். அந்த மண்டபக் காட்சிகளில் சேதுவில் மனநிலை பிறழ்ந்த விக்ரமை கட்டிப் போட்டு வைத்திருக்கும் காட்சிகளை நினைவு படுத்துகின்றன.

இப்போ பூஜா - கதாநாயகி. கண் தெரியாத பிச்சைக்காரி. இவர்களுக்கென ஒரு தனி உலகம். எம் ஜி ஆர் ஆக, சிவாஜியாக ரஜினியாக வேடமிட்டு பிச்சை எடுக்கும் கூட்டத்தில் பாட்டுப் பாடும் குருட்டுப் பெண் பூஜா. பூஜா ஓடும் ரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுக்கும் போது முருகனின் கண்ணில் பட, பராக்கிரமம் மிக்க ஒரு காவல் துறை அதிகாரி உதவியோடு பூஜா தாண்டவனின் கும்பலுக்கு கடத்தப்படுகிறார். இந்த கும்பலில் பெண் வேடமிட்டு ஆடும் ஒரு ஆணின் கதாபாத்திரத்தின் பெயர் நயன்தாரா. இதை விட நயன் தாராவை யாரும் கேவலப்படுத்த முடியும் என எனக்குத் தோன்றவில்லை. இவர்கள் காவல் நிலையத்தில் அடிக்கும் கூத்து நகைச்சுவை என்று எடுக்கப்பட்டிருந்தாலும், மனித மனங்களின் உள்ளே உள்ள வக்கிரத்தின் வடிகால் என்றே எனக்குப் பட்டது.

தாண்டவனின் உருப்படிக் கும்பலில், தோளில் கிளி தாங்கும் ஆண்டாளாய், பொன்னார் மேனியனாய் புலித்தோலை அரைக்கசைத்து, பெருமாளாய் என எல்லா இந்து கடவுள்கள் வேஷத்திலும் குள்ள மனிதர்கள், உடல் ஊனமுற்றோர் என பலரும் பிச்சை எடுக்க, அதில் இரு சிறார்களின் பேச்சும், சிரிப்பும் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது. அந்த நிலையில் அவர்கள் அப்படி சிரிக்க முடியுமானால் நமக்கெல்லாம் என்ன கேடு என தோன்றுகிறது.

இப்ப, தாண்டவனை வியாபார விசயமாக சந்திக்கும் ஒரு நாயர். இவர் கேரளாவில் தாண்டவனின் தொழில் செய்பவர். இவர் வந்து பணம் கொடுத்து தாண்டவனின் உருப்படிகளை பண்டமாற்று செய்ய வருகிறார். இளம் சிறார்களாய் பார்த்து தேர்ந்தெடுத்து இவர் அள்ளிக் கொண்டு போக தன் பேரனை இழக்கும் ஒரு பிச்சைக்கார கிழவரின் கோபத்தையும் ஆற்றாமையையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், கடவுளை தே... மகன் என வர்ணிக்கும் வசனம் தேவை இல்லாதது என நான் கருதுகிறேன்.

அடுத்து கேரளாக்காரருடன் வரும் அரூபி தன்னுடன் வாழ ஒரு பெண்ணை விலைக்கு வாங்க வருகிறார். அரூபி என்பதால் கண்ணில்லாத பூஜா தான் சரியான ஆள் என தேர்வு செய்யப்பட, முருகன் மனம் பதைத்து பூஜாவை தப்பிக்க செய்கிறார். தப்பிக்க முயலும் பூஜா, அகோரி சாமியிடம் சரணடைய, நாயரை நேருக்கு நேர் பார்க்கும் அகோரி அவரை அடித்து துவைத்து.... அடுத்து நாயர் காணாமலே போகிறார். அகோரியை காவல் துறை கைது செய்தாலும் எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் விடுவிக்கப்படுகிறார். பூஜா திரும்ப தாண்டவனிடம் பிடித்து வரப்பட, பூஜாவை கையில் கிடைக்கும் கல் ஒன்றை எடுத்து அடித்து சிதைக்கிறான் தாண்டவன். அடுத்து தாண்டவன் வந்து அகோரி சாமியை பார்த்து துவம்சம் ஆகிறார். பூஜா வந்து கடைசியில் அகோரி சாமியிடம் சரணடைய

"வாழ தகுதி இல்லாதவர்களுக்கு நான் தரும் மரணம் தண்டனை.
வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்" என படம் முடிகிறது.

முதல் 20 நிமிடங்களுக்கு வரும் காசி நகரக் காட்சிகளும் ஆர்யாவும் சரியான மிரட்டல். கங்கை கரையில் எரியும் பிணங்களும், கோவண சாமியார்களுமாய் அரட்டும் காட்சிகள். இது வரை ரொமாண்டிக் ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ஆர்யாவுக்கு இந்த படத்தில் மிரட்டும் அகோரி வேசம். பூஜாவுக்கும் குருட்டு பிச்சைக்காரி வேஷம்.

மனதை பிழிய வைக்கும் பிச்சைக்காரர்களின் குரூர உலகம் பார்ப்பவர்கள் மனதை பிசைய இப்படி ஒரு படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வருவது என்ன என்று எனக்கு புரியவில்லை. இடுகாட்டின் மேலும், எரியும் பிணங்கள் மேலும், பிணச் சாம்பலிலும், மனம் பிறழ்தலிலும் இயக்குனருக்கு அப்படி என்ன மையலோ தெரியவில்லை.

அதற்கும் மேலே இந்தப் படத்தை பற்றி வரும் ஆஹா ஓஹோ விமர்சனங்கள் என்னை இன்னும் குழப்புகின்றன. ஒரு வேளை எனக்குத் தான் கலைக் கண் இல்லையோ. ஒரு சைக்கோ தனமான இயக்குநரின் சைக்கோ தனமான குரூரமான படம் இது என்பது என் தாழ்மையான கருத்து. படம் முழுக்க அழுக்கும், கொடூரமும், குரூரமும்.... ஐயோ ஆளை விடுங்க சாமி. இப்படி ஒரு படத்தை ரசிப்பதென்றால் நான் கலைக் கண் இல்லாத குருடனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.