Thursday, October 30, 2008

சுல்தானும் பளுயிட் டைனமிக்ஸ் லேபும்

சுல்தான் அன்னைக்கு காலேஜ் ப்ளூயிட் டைனமிக்ஸ் லேபுக்கு லேட் (வழக்கம் போல).

புரபசரம்மா மலையாளி. கொஞ்சும் தமிழில் பேசுவார்கள். சுல்தான் லேப் வாசலில் நின்றான்.

எச்குச்சுமீ மேடம், எச்குச்சுமீ மேடம், எச்குச்சுமீ மேடம்

ம்ஹீம். மேடம் பிராக்டிக்கல் நோட்டில் கையழுத்து போடுவதில் பிசி. சுல்தான் வாசலில் நிற்பதையோ இல்லை எச்குச்சுமீ என லேபுக்குள் வர அனுமதி கேட்பதையோ கவனிக்கவில்லை. மெல்ல பராக்கு பார்க்க ஆரம்பித்துகொஞ்ச நேரத்தில் நம்ம சுல்தானுக்கு கவனம் சிதறத் தொடங்கியது. இருக்காதா பின்னே? பக்கத்து லேபான எலக்ட்ரானிக்ஸ் லேபுக்கு வந்து கொண்டிருக்கும் ஜீனியர் சிட்டுக்கள். மெய்மறந்து தான் சீனியர் என்னும் அகந்தை மறைந்து ஏகாந்த ஜொள்ளில் சுல்தான்.

கொஞ்ச நேரத்தில் தலை நிமிர்ந்து பார்த்த மேடம். எஸ் கமின். எஸ் கமின் என இரண்டொரு தடவை சொல்லிப் பார்த்தார்கள்.

ஜொள்ளு உலகத்தில் இருந்த சுல்தான் தன்னை மறந்தான். தானிருக்கும் லேப் வாசல் மறந்தான். மேடமின் எஸ் கமின் குரல் அவன் செவிகளை எட்டவில்லை. இப்ப மேடத்துக்கு கோபம் வந்து விட்டது. சத்தமாக

"சுல்தான். ஒண்ணு உள்ளிக்கு வா. இல்ல வெளிக்கி போ"

(இது உண்மைச்சம்பவம்)

Tuesday, October 28, 2008

ஒரு தீபாவளிக் கவிதை

ரொம்ப நாளைக்கு முன்னால் நான் எழுதிய ஒரு தீபாவளிக் கவிதை

என்ன தான் மிச்சம்?

கண்கள் சிவக்க
கண்ணீர் வழிய
அம்மாவின் திட்டுக்களுடன்
எண்ணெய்க் குளியல்.

மொடமொடக்கும்
புதுத் துணியும்,
அதில் வைத்த
சந்தன வாசமும்.

நாக்கு சுட
மேலண்ணம் பொத்துப் போக
அவசர அவசரமாய்
சாமி கும்பிடும் முன்னே
திருடித் தின்னும்
எண்ணெய்ப் பலகாரங்கள்.

பலகாரக் கூடையுடன்
பெரிம்மா பெரிப்பா
சின்னம்மா சித்தப்பா
வீட்டுக்கெல்லாம் ஒரு நடை.

தின்று கழித்து
உண்டு மகிழ்ந்து
வெடித்து வலித்து
சத்தம் ஓய்ந்த
உச்சி வெயிலில்
உள்ளூர் டூரிங் டாகீசில்
ஒரு தரை டிக்கெட் சினிமா.

கையில் வெடி வெடித்துக் காந்த
கத்தும் அப்பாவுக்கு பயந்து
நான் மறைக்க நினைத்தாலும்
என்னையும் அறியாமல்
வலியால் தானாய்ச் சுரந்து
கொட்டும் கண்ணீர்.

தெருவோரக் குட்டிச் சுவற்றை
அதிர அதிர அடித்த வெங்காய வெடி.
அந்த வெங்காய வெடியை
எனக்கு அறிமுகம் செய்து வைத்து
அடுத்த வருசமே செத்துப் போன
செல்வராசு சித்தப்பா.

அவர் போலவே இப்போதெல்லாம்
தீபாவளியையும் காணோம்.

என்ன தான் மிச்சம்?

வழக்கம் போல அரக்க பரக்க
ஆபீஸ் கிளம்பி ஓடும் போது
'ஹேப்பி தீவாளி மாப்ஸ்' என்ற
சினேகிதனின் வாழ்த்தைத் தவிர???

Saturday, October 25, 2008

தண்ணீர் தண்ணீர் தண்ணீர்

டிரெய்ன் அடுத்த ஐந்தாவது நிமிடமே நின்றது. சரி சரி இன்னும் ஆள் ஏத்தப் போறாங்க போலன்னு நின்னுகிட்டே இருந்தேன். என்னை தவிர எல்லோரும் இறங்கிட்டாங்க. கடைசியா இறங்கின அந்த கருப்பர் லாஸ்ட் ஸ்டாப். கோயிங் பேக்குன்னு ஏதோ சொன்னாரு. எனக்கு திரும்ப ஒரே குழப்பம். இருக்காதா பின்னே? பிளைட்டுலயே இரண்டு மூணு மணி நேரம் ஆகும்னு சொன்னாங்க. இப்ப என்னடான்னா டிரய்ன்ல அஞ்சே நிமிசத்துல லாஸ்ட் ஸ்டாப்புன்னா எப்படி? சரின்னு விதி மேல பாரத்த போட்டுட்டு பெட்டிகள எடுத்துகிட்டு கீழே இறங்கினேன். அந்த கருப்பர் கிட்ட ஒண்ணும் பேசாம என் டிக்கட் காட்டினேன். அவரு பாத்துட்டு ஏதோ கேட் நம்பர் சொன்னாரு. சரீன்னு திரும்ப என் டிக்கட்ட பார்த்தா அதுல அவர் சொன்ன கேட் நம்பர் போட்டிருந்துச்சி. போர்டுல இருந்தத படிச்சு கிட்டே அந்த கேட்ட பாத்து நடைய கட்டினேன். வழில டெர்மினல் லே அவுட்டுன்னு ஒரு போர்டு பார்த்தேன். அப்பத்தான் எனக்கு ஏதோ கொஞ்சம் விளங்குச்சு.

நான் வந்து இறங்குனது ஏர்போர்ட்டுல ஒரு கான்கோர்ஸ்ல. நான் திரும்ப ஏற வேண்டிய பிளைட் இன்னோரு கான்கோர்ஸ்ல. ஆக ஒரு கான்கோர்ஸ்லேர்ந்து இன்னோரு கான்கோர்ஸுக்கு தான் இப்ப நான் டிரைய்ன வந்து இறங்கி இருக்கேன்னு. மெட்ராஸ் ஏர்போர்ட் மாதிரி இல்லாம இங்க ஏர்போட்டே ஒரு ஊரு மாதிரி. தாம்பரத்திலேர்ந்து வெஸ்ட் மாம்பலம் வர்ற எலெக்ட்ரிக் டிரெய்ன் மாதிரி ஒரு டிரெய்னல தான் நான் ஏறி வந்திருக்கேன்னு. நல்ல வேளையா இந்த டிரெய்னுக்கு தனியா ஏதும் டிக்கட் வாங்கச் சொல்லலியேன்னு ஒரு சந்தோசம்.

இந்த ஏர்போர்ட் ஒரு தனி உலகம். உள்ளேயே எல்லா கடைகளும், பாரும். என்ன சுத்தம்? அதே நேரம் மதுர சித்திர திருவிழா கூட்டம் மாதிரி கூட்டமான கூட்டம். கொஞ்ச சனம் இங்கிட்டு ஓடுது. கொஞ்ச சனம் அங்கிட்டு ஓடுது. கொஞ்ச சனம் நிம்மதியா பாருல உட்காந்து தண்ணிய போட, இன்னும் கொஞ்சம் ஏதேதோ தின்னுகிட்டு இருக்கு. சில கேட்டுகள்ல மட்டும் கூட்டம் அம்முது. ஆனாலும் எல்லாம் வரிசைல நிக்குதுக. 4 அல்லது 5 கேட்டுக்கு அடுத்து டாய்லெட். எல்லா டாய்லெட்டும் சுத்தமா பளபளக்குது. நான் போக வேண்டிய பிளைட்டுக்கு இன்னும் 2 மணி நேரம் காத்திருக்கணும். அந்த கேட்டுகிட்ட வந்தப்பறம் தான் கொஞ்சம் மூச்சி வந்தது.

டாய்லெட் போய் வந்தாச்சி. பிளைட்ல அடிச்ச சரக்குக்கு நாவெல்லாம் வரண்டு போயி, தொண்டை காந்துது. தாகம்னா தாகம் அப்படி ஒரு தாகம். சரி தண்ணி குடிக்கலாம்னு பாத்தா திரும்ப குழப்பம். அங்க இங்க அலைஞ்சி தண்ணி இருக்கிற எடம் பார்த்தாச்சு. ஆனா டம்பர் ஒண்ணும் காணோம். நம்மூர்ருல இருக்க மாதிரி டம்ளர சங்கிலி கட்டி தொங்க விட்டிருப்பாங்கன்னு பாத்தா ம்ஹீம். இல்லை. அட என்னடா இது? நம்மூரு பக்கம் காக்கா பானைல கல்லு போட்டு தண்ணி குடிச்ச மாதிரி குடிக்கலாம்னு பார்த்தாலும் பானையும் இல்லை. கல்லும் இல்ல. என்ன பண்ணுறது ஏது பண்ணுறதுன்னு புரியல.

சரி நம்மள இவ்ளோ தூரம் கொண்டு வந்த முப்பாத்தம்மா (அதாங்க எங்க குல தெய்வம்) நம்மள கை விட மாட்டான்னு சொல்லி மனச தேத்தி கிட்டு எதுத்தாப்பல இருந்த ஒரு சேருல உட்கார்ந்துட்டேன். அட இவ்ளோ சனத்துல யாருக்காச்சும் தாகம் எடுக்காமலா போயிரும். அப்ப இங்க வந்து தானே ஆகணும். அவங்க எப்படி தண்ணி குடிக்கிறாங்கன்னு பார்த்துட்டு நாமளும் அப்படியே குடிச்சிடலாம்னு காத்திருந்தேன். அஞ்சி நிமிசம், பத்து நிமிசம், பதினஞ்சு நிமிசம் ஆச்சு. யாரும் வர்றா மாதிரி தெரியல. அப்பத் தான் கொஞ்ச தூரத்துல ஒரு கோக் மிசின் பார்த்தேன். அங்க போய் பார்த்தா ஒரு கோக்கு 75 சென்ட்டுன்னு போட்டிருந்துச்சு. உடனே மனசு கணக்கு போட்டுச்சி. இன்னைக்கு தேதிக்கு டாலருக்கு 35 ரூபாய். 75 சென்ட்டுன்னா கிட்டத்தட்ட 27 ரூபாய். 27 ரூபாய்க்கு கோக் குடிக்கணுமான்னு தோணவும் திரும்ப வந்து நல்ல பிள்ளையா உட்காந்துகிட்டேன்.

அடுத்த பத்தாவது நிமிசம் கோட்டு சூட்டெல்லாம் போட்டு ஒரு வெள்ளைக்காரர் வந்தார். அவரு நேரா தண்ணி குடிக்கிற இடத்துகிட்ட போனார். அந்த மேடைய சுத்தி பிளாஸ்டிக்கல ஏதோ பட்டை மாதிரி இருந்துச்சி. அத அமுக்கினாரி. உடனே தண்ணி பீச்சி மேல் வாக்குல அடிக்க அப்படியே குனிஞ்சி தண்ணில வாய் வச்சி குடிச்சாரு. ஆகா இப்படித் தான் இந்தூருல தண்ணி குடிக்கணுமான்னு தெரிஞ்சிகிட்டு அவரு போனதும் போயி உர் உர்ருன்னு உறிஞ்சி தாகம் தீர குடிச்சேன்.

நான் மட்டும் தான் இப்படின்னு நெனச்சா அமெரிக்கா வந்து 6 மாசத்துக்கப்பறம் மப்புல ஒருத்தர் ஏர்போர்ட் டாய்லெட்டுல சிக்னல்ல மூச்சா போன கதை சொன்னதுக்கப்பறம் தான் தெரிஞ்சது, நம்மள மிஞ்சவும் ஆளுக இருக்காங்கன்னு. அந்த கதை அடுத்து.

Thursday, October 23, 2008

ரயில் பயணத்தில்

யோகர்ட் தயிரு கொழப்பத்துக்கு முன்னாடியே எஸ்.வி.சேகரோட அமெரிக்காவில் அருக்காணி மாதிரி நம்ம கொழப்பம் ஆரம்பிச்சிடுச்சு. முத முதல்ல அமெரிக்கா வந்து இறங்குனது அட்லாண்டா, ஜார்ஜியா. ஏர்போர்ட்ல இருக்குனதும் கண்ண கட்டது. அவ்ளோ பெரிசு. திக்கு திசை தெரியல. இறங்கின இடத்துலேர்ந்து மத்திய மேற்கில் நான் வேலை பார்க்கப் போகும் கம்பனி இருக்கும் ஊருக்கு போக திரும்ப வேற ஒரு பிளைட் பிடிக்கணுமாம். அப்போதைக்கு எனக்கு புரிஞ்சது விருது நகர்லேர்ந்து மதுர பெரியார் பஸ்ஸ்டாண்டுல இறங்கி அண்ணா நகர், தபால் தந்தி நகர் போக டவுன் பஸ் பிடிக்கிற மாதிரி தான் இதுவும்னு.

ஒண்ணும் பேசாம அங்கன இருந்த ஒரு வெள்ளைக்கார பாப்பா கிட்ட டிக்கட்ட காட்டினேன். அது வடகிழக்கா கைய காட்டி டிரெய்ன், நெக்ஸ்ட் கான்கேர்ஸ்ஸுன்னு ஏதோ சொன்னிச்சு. ஆனாலும் இந்த பயபுள்ளைக ரொம்ப மோசம். இந்த கான்கோர்ஸ் அங்கிறாய்ங்க, அந்த கான்கோர்ஸ் அங்கிறாய்ங்க. நமக்கு தெரிஞ்சதெல்லாம் நான் மெட்ராசுல படிச்ச ஸ்போக்கன் இங்கிலீசு கோர்சுதான். இப்பத்தான் பிளைட்லேர்ந்து இறங்கி இருக்கோம். அடுத்து பிளைட் ஏறணும்னு நினைச்சா, போயி டிரைய்னல ஏறுங்கிறாய்ங்க. ஒரு வேளை இவனையல்லாம் இது வரை பிளைட்ல கொண்டு வந்ததே போதும்னு நெனச்சிட்டாங்களோ என்னமோ? சரி சரி. நாம மட்டுமா போறோம். எவ்ளோ சனங்க போகுது. சேர்ந்து போவாம்னு மனச தேத்திகிட்டேன்.

அடுத்து, சரி ப்ளைட்டுன்னா 2 இல்ல மூணு மணி நேரத்துல அந்த ஊருக்கு போயிடும்ன்னாங்களே இப்ப டிரைய்ன்னா எவ்ளோ நேரம் ஆகுமோ? டிரைய்ன பெர்த் இருக்குமா? ரிசர்வ்டா? அன் ரிசர்வ்டா? ரெண்டு கைலயும் ரெண்டு பொட்டி, தோள்ல ஒரு லக்கேஜு. ஒரு வழியா டிரய்ன்ல ஏறினா உட்கார கூட எடமில்ல. சரி தான் இங்கயும் நம்மூரு போலத் தான். நின்னுகிட்டு தான் போகணுமாக்கும். சரி கொஞ்சம் காத்தாட நின்னுகிட்டாவது வரலாம்னு சொல்லி பொட்டிகள எல்லாம் ஒரு ஓரமா வச்சிட்டு டிரெய்ன் படியாண்ட போயி நின்னேன். எல்லாம் என்னையே ஒரு மாதிரி பாத்தாய்ங்க. அடுத்து டிங் டிங்ன்னு சத்தம். ஸ்பீக்கர்ல ஏதோ ஸ்டாண்ட் கிளியர் ஸ்டாண்ட் கிளியர்ன்னு சத்தம். நான் இருந்த பொட்டில எல்லாம் ஏதோ சொல்றாங்க. என்னை பாத்து தான் சொல்றா மாதிரி இருக்கு. ஆனா எனக்கொண்ணும் புடிபடல. அப்ப ஒரு கருப்பர் என் கிட்ட வந்து "மூவ். மூவ்"ன்னாரு.

சரி தான் நம்மள நகரச் சொல்லிட்டு இவரு படிக்கட்டுல நிக்கப் போறாரு போல இருக்கு. பார்க்க ஆளு ஓங்கு தாங்கா இருக்காரு. எதுக்கு அவருகிட்ட போயி வம்புன்னு கதவாண்ட இருந்து தள்ளி வந்து நின்னேன். அடுத்த நிமிசம் டிங் டிங் சத்தமும் இல்லை. அந்த ஸ்டாண்ட் கிளியர் ஸ்பீக்கர் சத்தமும் இல்லை. கதவு வந்து சட்டுன்னு மூடிக்கிருச்சு. அப்பத்தாம் எனக்கு புரிஞ்சது. நாந்தான் அந்த கதவ மூட விடாம நின்னு கிட்டு இருந்திருக்கேன். அதாம் எல்லா சனமும் ஏதோ சர்க்கஸ்ல கோமாளிய பாத்தமாதிரி பாத்திருக்குன்னு.

Tuesday, October 21, 2008

யோகர்ட்டும்(Yogurt) தமிழனின் தயிரும்

அமெரிக்கா வந்த புதிது. நான் அப்போது மாமிசம் உண்பவனல்ல. முட்டை மட்டும் தான். வந்து சேர்ந்த ஊரில் நான் தான் 5 ஆவது இந்தியன். முதலாமவர் அங்கிருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளர். இன்னும் ரெண்டு பேரு பக்கத்து ஊர் பல்கலைக்கழகத்தில் படித்து இப்போது தான் இங்கே வேலைக்கு சேர்ந்திருப்பவர்கள். நாலாவது ஆள் எனக்கு ஒரு வாரம் முன்னாடி எனது அலுவலகம் மூலமாகவே இங்கு வேலை கிடைத்து வந்திருந்த ஒரு ஆந்திரா நண்பர். முதல் மூவரில் விரிவுரையாளார் கொஞ்சம் வயதானவர். குடும்பம், குழந்தைகள் என இங்கேயே ரொம்ப காலமாய் இருப்பவர். அடுத்த இரண்டு பேரும் மூணு நாலு வருசம் இங்கே படித்ததால் கொஞ்சம் அமெரிக்கனைசடு ஆன இந்தியர்கள். நம்ம ஆங்கில புலமையும் கம்மி.

காலேசுல எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இஞினியரிங் படிச்சாலும் ஆங்கில கம்யூனிகேசன் ரொம்ப தடுமாறும். இருக்காதா பின்னே? காலேஜ்ல லெக்சரரே "அந்த எலக்ட்ரானு இந்த டையொடு வழியா போயி, அந்த டியூப்ல இருக்க ஒரு தகட்டுல மோதின்னு..." பாடம் நடத்துவார். அடுத்து வேலை சென்னைல டிரைனியா. மீட்டிங் ஏதாச்சும் வந்தா அனுபவஸ்தர்க பேசுவாங்க. நமக்கு பேச வாய்ப்பே கிடைக்காது. கிடைச்சாலும் போன்ல அந்த பய புள்ளக என்ன பேசுதுன்னு ஒண்ணும் விளங்காது. இந்த லட்சணத்துல அமெரிக்கா வரதுக்காக இன்டர்வியூ பண்ணினவர் நம்மூரு காரரு ஒருத்தருங்கறதால எப்படியோ சமாளிச்சாச்சு. டெக்னிகலா பேசுறதெல்லாம் புரியும். மத்ததெல்லாம் சும்மா இடமும் வலமுமா தலை அசைச்சோ இல்ல, மையமா ஒரு அசட்டு புன்னகைலயோ சமாளிக்கிறது தான்.

இரண்டு பெட்ரூம் அபார்ட்மெண்ட். ஆந்திராக்காரர் பறப்பன, ஊர்வன, மிதப்பன, நீந்துவன என எல்லாம் சாப்பிடுவார். அதனால் அவருக்கு அதிகம் பிரச்சனை இல்லை. எனக்குத் தான் பசி பசி பசி. ஒரே பசி. அது நாள் வரை அம்மா சமையல், காலேஜ் ஹாஸ்டல் மெஸ், அல்லது ரோட்டோர புரோட்டாக்கடை, சென்னையில் பணி புரிந்த போது திரும்ப மெஸ் என சாப்பாடு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. அதனால் சமையல் பற்றி எல்லாம் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஒரு வழியாக முதல் நாள் ஏதோ பிரட், ஜாம் சாப்பிட்டு ஓட்டி விட்டேன். அன்று இரவே அம்மாக்கு போன் போட்டு குக்கரில் சாதம் எப்படி வைப்பது என தெரிந்து கொண்டு வெற்றிகரமாக சாதம் வைத்தாகி விட்டது. என்னத்தை ஊற்றிச் சாப்பிட? வெறும் சோறை எப்படி தின்பது? அப்பத்தான் நம்ம ஆந்திரா நண்பர் ஒரு ஐடியா சொன்னார். பக்கத்துல இருக்க கடைக்கு போய் தயிர் மட்டும் வாங்கி வருவோம். எங்கிட்ட கொஞ்சம் சாதப் பொடி, ஊறுகாய் இருக்குன்னார். கடை கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வீட்டுல இருந்து. அப்பத்தான் அமெரிக்கா வந்திருந்ததால காரெல்லாம் கிடையாது. நட ராஜா சர்வீசு தான்.

சரின்னு கடைக்கு போய் தேடு தேடுன்னு தேடினோம் தயிர. ம்ஹீம். அகப்படல. தயிர இங்கிலீசுல கர்டு(Curd)ன்னு தான சொல்லுவோம்னு அங்க வேலை பார்க்கிற ஒரு பொண்னு கிட்ட போயி கேட்டும் பார்த்தோம். அது முழிச்ச முழிய பாத்தா கர்டுன்னா இந்தூருல ஏதோ கெட்ட வார்த்தையாட்டம் இருக்குன்னு நெனச்சுகிட்டு என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு திகைச்சு போய் நின்னோம். ஒண்ணும் விளங்கல. சரி நமக்கு இந்த ஊருல தெரிஞ்ச ஒரே ஆளுக அந்த காலேஜ் பசங்க தான் அவங்கள போன போட்டு கேட்போம்னு சொல்லி பார்த்தா அவனுங்க போன் நம்பர் வீட்டுல இருக்கு. திரும்பி வா வீட்டுக்கு. வந்து போன போட்டா அவனுங்க போனுலயே சிரிக்கிறானுக. இந்தூருல தயிர கர்டுன்னு சொல்ல மாட்டாங்க. கடைல போயி யோகர்ட்டுன்னு தேடுன்னாங்க.

சரி திரும்ப நடைய கட்டு கடைக்கு. இப்பவே மணி 8 ஆச்சு. ஊதக் காத்தடிக்குது. குளிரு வெடவெடங்குது. பசி வேற. ஒரு வழியா அடிச்சி பிடிச்சு கடைல போயி யோகர்ட்டுனு தேடி ஒரு டப்பாவ தூக்கி கிட்டு கையோட ஒரு பாக்கட் சிப்ஸ் வாங்கிகிட்டு வந்தாச்சி. இப்ப மணி 9 ஆச்சு. இருட்டு. குளிரு, பசி. வீட்டுக்கு வரதுக்குள்ள உடெம்பெல்லாம் வெறச்சி போச்சி. அதீத பசில கண்ணு கட்டுது. அத்தோட இந்த கர்ட், யோகர்ட், தயிரு குழப்ப டென்சன மறக்க வெறும் வயித்துல அடிச்ச ரெண்டு மூணு தம்மு வேற.

ஆவலா வந்து இருக்குற சோத்த அப்படியே ரெண்டா வகுந்து ஆளுக்கொரு தட்டுல சோத்த போட்டு நல்லா தயிர ஊத்தி பெசஞ்சாச்சு. தயிர அப்படியே பாக்க கெட்டியா நம்மூரு எருமைத் தயிரு மாதிரி இருக்க, கொஞ்சம் ஜாஸ்தியாவே விட்டு நல்லா பெசஞ்சி பக்கத்துல ஊறுகாய் வச்சிகிட்டு எடுத்து வாயில வச்சா....

வாந்தியே வந்துரும் போல ஆயிருச்சு. ஒரே இனிப்பு. ஒண்னும் விளங்கல எங்களுக்கு. என்னத்த பண்ண? சோறும் மிச்சமில்லை. எல்லா சோத்தையும் போட்டு பெசஞ்சாச்சு. எனக்கான அழுகை கண்ண முட்டுது. விதியேன்னு எல்லாம் எடுத்து குப்பைல போட்டுட்டு வெறும் சிப்சும் தண்ணியும் குடிச்சிட்டு படுத்துட்டோம். மறு நாள் ஆபீசுல போய் அந்த காலேஜு பய புள்ளகள ஏண்டா இந்த ஊரு தயிரு இப்படி இனிக்குதுன்னா அவனுங்க இடி இடின்னு சிரிக்கிறானுங்க. நீங்க பிளைன் யோகர்ட் பாத்து வாங்கணும்டா. ஏதாச்சும் பிளேவர் யோகர்ட் வாங்கி இருப்பீங்கன்னு. அப்பறம் கடைல போயி பாத்தா தான் தெரியும் இந்தூரு பக்கிக ஸ்ட்ராபரி, ராஸ்பெரின்னு என்னென்ன பழம் இருக்கோ எல்லாத்தையும் தயிர்ல கலந்து வச்சிருக்குகன்னும் நாங்க அன்னிக்கு ராத்திரி வாங்கி வந்தது வெனிலா யோகர்ட்டுன்னும்.

யாருக்கு அந்த காண்ட்ராக்ட் ?

டெல்லில இருக்க ராஷ்டிரபதி பவன் சுவத்துல ஒரு சின்ன ரிப்பேர் வேலை. சரின்னு மூணு காண்ட்ராக்டர கூப்பிட்டு வேலைய முடிக்க எவ்ளோ ஆகும்னு கேட்டாங்க.

முதல்ல வந்தது உ.பி காண்ட்ராக்டர். அவர் வந்து சுவத்துல இருக்க டேமேஜ பாத்தாரு. டேப் வச்சி அளந்தாரு. ஏதேதோ கணக்கு போட்டாரு. கடைசியா 6000 ரூபாய் சிமெண்ட், கல்லு, மத்த சாமனுக்கு. 3000 ரூபாய் வேலை ஆளுகளுக்கு. 1000 ரூபாய் லாபம் எனக்கு. ஆக மொத்தம்10,000 ரூபாய் ஆகும்ன்னாரு.

அடுத்து வந்தது ஆந்திரா காண்ட்ராக்டர். அதே போல சுவத்துல இருக்க டேமேஜ பாத்தாரு. டேப் வச்சி அளந்தாரு. ஏதேதோ கணக்கு போட்டாரு. கடைசியா 5000 ரூபாய் சிமெண்ட், கல்லு, மத்த சாமனுக்கு. 2000 ரூபாய் வேலை ஆளுகளுக்கு. 1000 ரூபாய் லாபம் எனக்கு. ஆக மொத்தம் 8,000 ரூபாய் ஆகும்ன்னாரு.

கடைசியா வந்தது பீகாரி. நடந்ததெல்லாம் பார்த்துக்கிட்டே இருந்தவர் அளக்கல, கணக்கு போடல. நேரா இன்சார்ஜ் ஆபீசர் கிட்ட போனார். கிசுகிசு குரல்ல "38,000 ரூபாய்"ன்னார்.

ஆபீசருக்கு அதிர்ச்சி. "என்ன பைத்தியமா உனக்கு? அவங்க ரெண்டு பேரும் 10,000 இல்ல 8000 ரூபாய்க்கு வேலை முடிக்கிறேன்னு சொன்னா நீ மட்டும் 38,000 ரூபாய்ங்கிறேயே?"

"10,000 உங்களுக்கு. 10,000 எனக்கு. 10,000 லல்லுக்கு. மிச்சம் 8000 ரூபாய்க்கு ஆந்திராகாரர இந்த வேலைய முடிக்க சொல்லிடலாம். என்ன சொல்றீங்க?"ன்னார் பீகாரி.

யாருக்கு அந்த காண்ட்ராக்ட் கெடச்சதுன்னு இப்ப உங்களுக்கு ஏதாச்சும் சந்தேகமா?

Monday, October 20, 2008

வெடிதேங்காய் 03 முற்றும்

பொட்ட ரங்கனின் தலையிலேயே ஒரு சின்ன தேங்காய் அளவுக்கு புடைச்சிருச்சு. ஒரு வழியா பறிச்ச தேங்காய்களை ஆளுக்கொண்ணாய் கையில பிடிச்சி கிட்டு திரும்ப பள்ளிக்கோட மைதான புளிய மரத்தடி. இப்ப ஆப்ரேசன் வெடி தேங்காயோட அடுத்த கட்டம். பள்ளிக்கூட மைதானத்துல ஒரு ஓரத்துல ஒரு அங்காளம்மா கோவில். கோயிலுன்னா கோபுரம் சிலை எல்லாம் இல்ல. ஒரே ஒரு கல்லு மேடை. மேடைக்கு மையத்துல ஒரு சூலாயுதம். அந்த சூலாயுதம் பக்கத்துல ஒரு சின்ன கல்லு பிறைல எரியுற அகல் விளக்கு. அவ்ளோ தான். இந்த கல்லு பிறை அகல் விளக்க தெனமும் சாயங்காலம் ஒரு கிழவி வந்து எண்ணெய் ஊத்தி ஏத்தி வைக்கும். இப்ப அந்த விளக்கு அணஞ்சி கிடக்க மொத அத பத்த வச்சாங்க. அந்த வெளக்கு வெளிச்சத்துல சரசரன்னு தேங்காய்கள அருவா வச்சி சீவி எடுத்தார் முனிய மாமா. அப்பறம். அவரு தேங்கா சீவிக்கிட்டு இருந்தப்ப பக்கத்துல இருந்த புங்க மரத்துல இருந்து நாலு கிளகள ஒடச்சி மூர்த்தி அண்ணன் அந்த கிளல இருந்து ஆணி மாதிரி 10 இல்ல 12 குச்சிகள சீவினாரு. இந்த மர ஆணிங்க நுனில தடிச்சி கீழே வர வர கூரா இருந்துச்சி. என்ன நடக்குதுன்னு எனக்கொண்ணும் புரியல. இப்ப முனிய மாமா பட்ட சீவின தேங்காய் கண்ணுகள அருவா நுனி வச்சி கொத்தி ஓட்டை ஆக்கினார். வோவ்ரு தேங்காயிலயும் 3 கண்ணு திறந்துச்சி இப்ப. திறந்த கண்ணுக வழியா கேசவ மாமாவும், கணேசண்ணனும் சக்கரயும், பொரியையும் உள்ள திணிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சம் தேங்காய் தண்ணி வழிஞ்சி வர ஆரம்பிச்சிது. கண்ணு தொறந்த தேங்காய்களுக்குள்ள பொரி, சக்கர திணிச்சதும், அடுத்து அந்த தேங்கா மூர்த்து அண்ணன் கைக்கு போகும். இப்ப திறந்திருக்க ஒவ்வொரு கண்ணையும் சீவி வச்ச புங்க மர ஆணி வச்சி கல்லால தட்டி தட்டி இறக்கி அடைச்சாரு மூர்த்தியண்ணன். எல்லா தேங்காயும் இதே போல தயாராச்சு.

அடுத்து அல்லக்கைக அடுப்பு பத்த வைக்கிறதாட்டம், கொஞ்சம் சுள்ளி, கொஞ்சம் காஞ்ச பருத்தி மாரு, கொஞ்சம் வக்கலு எல்லாம் போட்டு பழைய பேப்பர வச்சி பத்த வச்சி தீமூட்டம் போட்டங்க. இந்த தீமூட்டம் கோயிலு கல்லு மேடைக்கு பின்னாடி காத்து அடிக்காத இடத்துல அமைவா. நல்லா தீ பத்துணதும் எல்லா தேங்காய்களும் நெருப்புல போட்டாங்க. அடுத்து ஒரு பத்து பதினஞ்சி நிமிசம் யாரும் பேசல. மாறி மாறி சுள்ளிகள போட்டு தீய எரிய விடுறது தான் வேலை. அந்த இரா வேலைல கொஞ்சமா அடிச்ச குளிருக்கு அந்த தீ நல்லா எதமா இருந்துச்சி. எரியற தீயில கேசவ மாமா ஒரு சிகரட்ட பத்த வைக்க, சின்ன பசங்க நாங்கள்ல்லாம் ஆச்சர்யமா பாத்தோம். ஏலே எவனாச்சும் நானு சிகரட்டு குடிக்கிறத பத்தி வேற யார்கிட்டயும் சொன்னீங்க கோனாரு தோட்டத்து எருக்குழில தள்ளி மொத்தமா மூடிப் புடுவேஞ்சரியா? மாமாவுக்கு பதில் சொல்லக் கூட எங்களுக்கு தகிரியம் இல்லை.

அடுத்து டொப்புன்னு ஒரு சத்தம். மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு. மூர்த்தி அண்ணன் கைல இருந்த குச்சியால கங்குகள ஒதுக்கி ஓடு தெறிச்ச தேங்காய மெல்ல வெளில உருட்டி எடுத்துச்சு. நல்ல சூடு. அத அப்படியே முனிய மாமா துண்டுல போட்டு எடுத்துகிட்டு போய் பக்கத்துல இருந்த அடிகுழாய்ல கழுவினாங்க. என்ன் ஆச்சர்யம்? தேங்காய் மூடி மட்டும் தெறிச்சி போயிருக்க உருண்டையா பந்து மாதிரி உள்ளாற இருக்க தேங்காய் மட்டும் அழகா வெடிச்சி வெளில வந்திருந்துச்சி. அடுத்தடுத்து தேங்காய்க ஒவ்வொண்ணா இப்படி வெடிச்சி எல்லாம் கழுவி எடுத்து முனிய மாமா துண்டுல கட்டிக்கிட்டாங்க. அடி கொழா தண்ணி பிடிச்சாந்து தீ மூட்டத்துல ஊத்தி சுத்தமா அணச்சாச்சி. இப்ப லேசா கருகல் வாடையும் தேங்காய் பர்பி போல ஒரு வாடையும் கலந்து அடிச்சது காத்துல. அத்தோட பக்கத்து சோல காட்டுலேர்ந்து அப்பத்தாம் பால் கட்டுற பருவத்துல இருக்க சோளக்கதிரு வாசம் வேற. புளிய மரத்து தூருல உக்காந்து அருவா வச்சி மூர்த்தி அண்ணன் வெடி தேங்காய்கள பிளந்து வகுந்து சில்லு போட்டு ஆளுக்கு கொஞ்சமா கொடுத்தாரு.

தேங்கா தண்ணில பொரியும், சக்கரையும் ஊறி அதுலேயே அப்படியே தீ சூட்டுக்கு வெந்து பதமா அந்த இனிப்பு சாறெல்லாம் தேங்கா பத்தைல இறங்கி அத்தோட தீல கொஞ்சமா கருகுன வாசத்தோட ஆகா என்ன சுவ.. வாழ்க்கைல அதுக்கப்பறம் இது வரை அதும்மாதிரி எதும் சாப்பிட்டதில்லை. அதுக்கப்பறம் நான் பாட்டி ஊர் போகும் போது ஓரிரு தடவைகள் மூர்த்தி அண்ணனை வழியில் பார்த்து சிரித்ததோடு சரி. அவர் பத்தாவதோடு படிப்பை நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க விவசாயத்தில் இறங்கி விட்டாரம். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாய் காலேஜ், வேலை என பாட்டி ஊருக்கு போவதே அத்துப் போய் விட்டது.

இது நடந்து முடிஞ்சி 13 வருசம் கழிச்சி வாழ்க்கை என்னை அமெரிக்கால கொண்டு வந்து தள்ளீருச்சி. ரொம்ப நாள் கழித்து என் பாட்டிக்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்தேன். ஊருல என்ன விசேசம் என்று கேட்ட போது பாட்டி கேட்டார்கள்.

ஊருல நம்ம தெரு மூர்த்தி ஞாபகம் இருக்காடா உனக்கு?

நல்லா ஞாபகம் இருக்கு. அவர் இப்ப எப்படி இருக்காரு?

அவன் போன வாரம் மூளைக்காச்சல்ல செத்துப் போய்ட்டாண்டா. அவனுக்கு கல்யாணம் ஆகி மூணு புள்ளைக பாவம்.

எனக்குள் பொட்டென்று வெடி தேங்காய் வெடித்தது. இம்முறை தேங்காயின் சுவை என்னமோ கசந்தது என் வாய்க்குள்.

Saturday, October 18, 2008

வெடி தேங்காய் 02

கொஞ்ச நேரத்துல கூட்டத்துக்குள்ளேயே மூர்த்தி அண்ணன் ஒரு கூட்டம் சேர்த்தான். ஒரு பக்கம் உருமி மேளம், இன்னோரு பக்கம் நையாண்டி மேளம், அது மட்டுமில்லாம மரத்துக்கு மரம், மாடி வீட்டுக்கு வீடு கட்டி இருந்த குழா ரேடியோல குலவை, மாரியம்மா பாட்டு இந்த சத்தத்துல ஏதேதோ சிக்னல், ஏதேதோ தலை அசைப்புன்னு ஒவ்வொருத்தரா ஒதுங்கினோம். ஊரு பொட்டல்ல தான் இத்தன அக்குறும்பும் சத்தமும். ஊருக்கு அந்தப்பக்கம் இருக்க ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் அமைதி. மையமாய் இருக்கும் புளிய மரம் மட்டும் காற்றுக்கு தலை ஆட்டிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் பொட்ட ரங்கன், சொரப்பழம் சந்திரன், மீனாச்சி என்றழைக்கப்படும் மீனாட்சி சுந்தரம் என என் வயது பயலுகளுடன், கடைக்கார கணேசண்ணன், முசக்காது முனிய மாமா, முட்டகண்ணு அண்ணன்(பட்ட பெயர் மட்டுமே தெரியும், நிஜப் பெயர் அவரது அப்பா அம்மாவுக்கே தெரியுமா என்பது சந்தேகம் தான்), புளியமரத்தாரு ஊட்டு கேசவ மாமான்னு மூர்த்தி அண்ணன் கோஷ்டியுமாக சேர்ந்தாச்சு.

கேசவ மாமா தான் இடஞ்சொல்லியாம். அப்படின்னா அவருதாம் அன்னிக்கு பகலிலேயே அக்கம் பக்கம் இருக்குற தென்னதோப்புகள நோட்டம் விட்டு எந்த தோப்பு எந்த மரம், எந்தக் கொல, எத்தன தேங்கா முத்தலா வெடி போட பதமான்டு பாத்து வச்சிருந்தாரு. முசக்காது முனிய மாமா தான் மரமேறி. எந்த மரமாம்னாலுஞ்சரி, எந்நேரம்னாலும் சரி குரங்கு குட்டி மாதிரி சும்மா தாவி ஏறுவாருன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். முட்டக்கண்ணு அண்ணனுக்கும் கடைக்கார கணேசண்ணனுக்கும் இதும் மாதிரி தனி திறமெயெல்லாம் ஒண்ணுங் கிடையாது. இருந்தாலும் ரெண்டு பேருக்கும் சரியா டூட்டு போட்டிருந்துச்சி மூர்த்தி அண்ணன். மூர்த்தி அண்ணந்தாம் கோஷ்டி தலைவரு. அவரு என்ன பண்ணுவார்ன்னெல்ல்லாம் கேட்க முடியாது. அவரு சொல்வாரு எல்லாம் செய்வாக. அம்புட்டுதேன். கணேசன்னன் கடைல அவங்க அப்பனாத்தா இல்லாத நேரமா பாத்து கொஞ்சம் சக்கர, பொரி எல்லாம் கிளப்பிட்டு வந்து முட்டக்கண்ணு வீட்டுல ஒளிச்சி வைச்சிருந்திருக்கு. முட்டக்கண்ணு ஊட்டுல அவங்க அப்பனாத்தா தூரந்தொலவுல எங்கெனயோ கூலி வேல பாத்து கிட்ட்டிருந்ததால அவக அப்பத்தா மட்டுந்தேன். அதுக்கு பாவம் பகல்லயே பசு மாடு தெரியாது. இருட்டுல எங்கன எரும மாட காணப் போகுதுங்கிற தகிரியத்துல முட்டக் கண்ணு வீடு தான் எல்லா ஐட்டத்துக்கும் கொடோனு.

நாங்கெல்லாம் சும்மா அல்லக்கைக. சுள்ளி பொறுக்க, ஊட்டுலேர்ந்து நெருப்பெட்டி திருடியாறன்னு மத்த பசங்க எல்லாம் பம்பரமா சுத்தி வர நானு பட்டினத்து புள்ளங்கற கெத்துல சும்மா புளிய மர தூருல உட்காந்து தேமேன்னு வேடிக்கை பாத்துகிட்டு இருந்தேம். (கெத்துமில்ல ஒரு மண்ணுமில்ல, நீயி ஒரு வேலைக்கும் லாயக்கில்லேண்டு சொல்லித் தாம்லே மூர்த்தி அண்ணன் உன்னய சும்மா உட்கார வச்சிடுச்சின்னு மறு நாள் காலைல சொரப்பழம் சந்திரன் என்னுடன் சண்டை இட்ட போது சொன்னது எனக்கு இன்னும் மனதோரத்தில் கொஞ்சம் வலிக்கிறது). சரி இப்ப வெடி போட தயாரானாக. அன்னிக்கு இராத்திரி குறி கோனாரு தோட்டம். பள்ளிக்கூடத்த ஒட்டி இருக்க பெரிய தென்னந்தோப்பு. அதுக்கு ஊடால வரப்போடு நடந்து அரை பர்லாங்கு போனாக்க பெரிய கெணறும் அத்த ஒட்டி பம்பு செட்டும். பம்ப் செட்டு பக்கத்துல கூர வேய்ஞ்சு ஒரு மடம் மாதிரி. அங்கன தாம் ஊரு பெரிய புள்ளிக பகலுல ஆடு புலி ஆட்டம், சீட்டுன்னு கள கட்டும். அங்கன இருந்த பம்பு செட்டுலயே காவக்கார சங்கிலி இருப்பாரு. மத்த நாளுக்கண்ணா ஏதாச்சும் அரவங் கேட்டாலே கைல பெரிய பூண் போட்ட தடிய எடுத்துகிட்டு நாளை நமதே எம்ஜிஆர் மாதிரி வரும் அவரும் இன்னிக்கு பொங்கலை முன்னிட்டு ஊருக்குள் போயிருக்க எங்கள் படை உள்ளே நுழைந்தது.

வானத்தில் மின்னும் நட்சத்திரங்களின் ஒளி தவிர்த்து முழுக்க இருட்டு. காற்றில் ஆடும் ஓலைகள், தூரத்தில் இருந்து காற்றோடு வரும் பொங்கல் சத்தம். அடுத்து எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தன. "இதாம்டா மரம்" என கேசவ மாமா அடையாளஞ் சொன்னதும் சரசரவென முனிய மாமா மரமேறினார். அடுத்து இருட்டில் பொத் பொத்தென இரண்டு சத்தம், அடுத்து 'அய்யயோ ஆத்தே." என ஒரு சத்தமும். திரும்ப ஒரு பொத். மொத்த கூட்டமும் சத்தம் போட்ட ரங்கனை சுற்ற, சரசரவென முனிய மாமா இறங்கி கூட்டத்தில் கலந்தார். பொட்ட ரங்கன் தலையில் விழுந்தது நல்ல வேளையாக ஒரு முத்திய நெத்து தான். முனிய மாமா பறித்த தேங்காய்களை எல்லாம் நாங்கள் இல்லாத இடத்தில் தான் போட்டார். பாவம் பொட்ட ரங்கன் கெட்ட நேரம் ஒரே ஒரு நெத்து மட்டும் மாமா கை பட்டு தவறி அவன் தலையில் விழுந்து விட்டது. ஆளுக்காள் முதலுதவி. இருட்டில் யார் தலையை யார் தேய்க்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் யாரோ என் தலையை அழுத்தி அழுத்தி தேய்த்து வேறு விட்டார்கள். (வேறென்ன என் தலை தான் பொட்ட ரங்கனின் தலை என நினைத்து தான்).

வெடி தேங்காய் 01

வெடி தேங்காய் 01

நான்காவதோ இல்லை ஐந்தாவதோ படிக்கும் பருவம். பாட்டி ஊரில் கிராமத்து தேவதை ஒன்றுக்கு பொங்கல். கரகம், ரெகார்ட்டு டான்ஸ், பொய்கால் குதிர, கொறவங் கொறத்தி, நாடகம், ராட்டினம், வெடி, அம்மன் செலைக்கும் அம்மன் தயவுல பக்கத்துல இருக்க அய்யானார் குதிரைக்கும் புது பெயிண்ட், தெரு முழுக்க கலர் கலரா காகித தோரணம், தெருவோரமெல்லாம் பத்து அடிக்கு ஒரு மூங்கில் கம்பு நட்டி அதுல ஒரு ட்யூப் லைட், நையாண்டி, உருமி மேளத்தோட தீச்சட்டி, பூக்குழி, சப்பரம்ன்னு ஊரே களை கட்டி இருக்கு. வயசுப் பொண்ணுங்க எல்லாம் சும்மா சீவி முடிச்சி சிங்காரிச்சு, ஐடெக்ஸ் கண்மை போட்டு, ஸ்டிக்கர் பொட்டு, குங்குமப் பொட்டு, பவுடர்ன்னு வசதிக்கு ஏத்த மாதிரி மேக்கப் போட்டு லைட் வெளிச்சத்துல சும்மா தேவத கணக்கா அங்கிட்டும் இங்கிட்டும் திரிய, ராசபாளையம், விருது நகர் பருத்தி மில்லுல வேல பார்க்கிற பய புள்ளக எல்லாம் சும்மா சோக்கா பேண்ட்டு சட்ட போட்டுகிட்டு கழுத்துல ஒரு கர்சீப சுத்திகிட்டு லுக்கு உடுதுக.

அப்ப நம்ம மக்க பாவம் டாஸ்மாக்க கண்டாகளா இல்ல, சரக்கு தான் இவ்ளோ லேசுல கெடச்சுதா? எல்லாம் பட்டையும் பாக்கெட்டும் தான். மாமமச்சான் அண்ணந்தம்பி அண்டஒண்டல யாராச்சும் ஆருமில இருந்தா மட்டும் பாட்டில் சரக்கு கொஞ்சம் மோந்து பாக்க கெடக்கும். அந்த வரச்சிலயும் கூட்டத்துக்குள்ள அங்கங்க தண்ணி போட்டு சலம்பலும், பக்கத்துல ஒரு கெட்ட பழ வாசமும். கூட்டமெல்லாம் கொறவங் கொறத்திக்குக்கும் கரகாட்டத்துக்கும் தான். இளந்தாரிகள விட பல்லு போன பழசுக ம்ஹூம் இல்ல இல்ல பல்லு போன பெரிசுக ரவுசு தான் பெரிசா இருக்கும். ஆட்டக்காரிகளுக்கு ரூவா மால போடுறதென்ன, ஜாக்கட்டுல ரூவாய குத்துறதென்னன்ன ஒரே அலம்பல் தான்.

இந்த கலாட்டால சிக்கி பார்க்கக் கூடாதது ஏதாச்சும் சின்ன பய நானு பார்த்து கெட்டு போயிருவேன்னு பாட்டி வீட்டு இருந்த தெரு மூர்த்தி அண்ணன் கூட என்னய வேடிக்கை பார்க்க அனுப்பி இருந்தாங்க. மூர்த்தி அண்ணன் பக்கத்தூருல ஒம்பதாப்பு படிச்சிகிட்டு இருந்துச்சி. நல்ல புள்ள. விவசாயக் குடும்பத்துக்கு ஏத்த புள்ள. பள்ளிக்கூடம் விட்டு வந்துச்சின்னா பொத்தக பைய வீட்டுல போட்டுட்டு கஞ்சி குடிச்சிட்டு எரும மாடுகள பத்திகிட்டு மேச்சலுக்கு விடப் பொறப்படும் பொறுப்பான புள்ள. அதாம் மூர்த்தி மேல நம்பிக்க. கொஞ்ச நேரம் கூட்டத்துக்குள்ள அங்கிட்டும் இங்கிட்டும் திரிஞ்சோம் நானும் அண்ணனும். ஏலே. நாங்க கொஞ்ச நேரத்துல பள்ளிக்கூட மைதானத்துல வெடி தேங்கா போடப் போறோம். உங்க அவ்வாகிட்ட சொல்ல மாட்டேன்னு சத்தியஞ் செஞ்சி கொடுத்தியான்னா எங்கூட வரலாம்ன்னு மூர்த்தி அண்ணன்.

பட்டினத்து புள்ள நானு வெடி தேங்கா கண்டன இல்ல விடலப் புள்ளக வில்லங்கம் கண்டனா? எனக்கு வேண்டியதெல்லாம் இப்பக்குள்ள ஊட்டுப் பக்கம் தல வக்க கூடாது அம்புட்டு தேன். ஏன்னா எங்க சித்தி அன்னிக்கு ராத்திரி தீச்சட்டி எடுக்குறாங்க. பிரியமா பாசமா இருக்குற சித்தி மஞ்ச சேல கட்டி, மஞ்ச தண்ணிய தலைக்கு ஊத்தி கிட்டு குலவி போட்டுகிட்டு கைல வேப்பில தாங்கலா வைச்சி சட்டி எடுத்து சாமி வந்து ம்ம்ம்ம்ம்ம்ம்னு ஒரு உறுமலோட கண்ணு ரெண்டும் செருக ஒரு ஆட்டம் ஆடினா போதும். எனக்கு பயத்துல டவுசருலயே ஒண்ணுக்கு போற மாதிரி ஆகிப் போகும். அதுலயும் சட்டி கைல ஏறுறதுக்கு முன்னாடி சாமி ஆடிகிட்டு இருக்குற அவங்க காலுல விழுந்து எந்திருக்கிறப்ப, எந்தலைல கைய வச்சி ஒரு அழுத்தி அழுத்தி நெத்தி நெறய விபூதி பூசி மிச்சத்த என் தலைல போடுவாங்க பாருங்க அப்ப எனக்கு ஈரக்கொலயே பதறும். சரி இதுக்கு பதிலா மூர்த்தி அண்ணன் எங்கன கூப்பிட்டாலும் போகலாம்னு தோணிச்சி.

இன்னும் வரும்...

முதலில் நன்றி - நண்பர் குடுகுடுப்பைக்கு.

முதலில் நன்றி - நண்பர் குடுகுடுப்பைக்கு.

உழைத்துக் களைத்து ஓடாய்த் தேய்ந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு மாலையில் செல்லில் அழைத்தது நம்ம குடுகுடுப்பை.

"டேய். நான் பிளாக் எழுதலாம்னு இருக்கேன்"ன்னு போட்டாரு ஒரு குண்ட.

"என்னடா திடீருன்னு என்னமோ நான் மொத்தமா இந்தியா போய் செட்டில் ஆகப் போறேங்கிற மாதிரி ரொம்ப ஈசியா சொல்றியே பிளாக் எழுதப் போறேன்னு. ஏண்டா இந்த கொலை வெறி?"

(மக்கா... என்னால முடிஞ்ச அளவுக்கு குடுகுடுப்பை கிட்ட இருந்து இந்த வலைப்பதிவாளர் உலகத்த காப்பாத்த முயற்சி பண்ணினேன். ஆனா என்ன செய்ய... தசாவதாரம் படத்துல 12ம் நூற்றாண்டுல கடல்ல போடப்பட்ட ரங்க நாதர் சுனாமியால வெளில வந்த மாதிரி குடுகுடுப்பைக்குள்ள ஏதோ சுனாமி அடிச்சி இந்த கற்கால வலைப்பதிவாளர் ஆர்வம் வெளில வந்துருச்சு.)

அதுக்கெல்லாம் அண்ணன் அசர மாதிரி தெரியல. நான் கொலை வெறி அப்படி இப்படின்னு பேசினதெல்லாம் அண்ணன் காதிலயே வாங்கிகாம ஒரு ரெண்டு மூணு பேருங்கள எடுத்து விட்டு இதெல்லாம் எப்படி என் பிளாக்குக்கு பேருன்னாரு. அவரு சொன்னதுல எல்லாமே ஒரிஜினல் மேட்டர். எல்லாம் காப்பி ரைட் வாங்கற அளவு அசத்தலான பேரு. அதனால அந்த பேருங்கள இங்க தர முடியாது மன்னிக்கனும். அதுல ஒண்ண நான் அருமை, ஆகா, ஓகோன்னெல்லாம் புகழ அவரும் சரிடா இதாம் என் பிளாக் பேரு. எழுதிட்டு உனக்கு சொல்றேன் படிச்சு பாருன்னாரு. ரெண்டு நாளாச்சு. ஒண்ணும் சத்தமே காணோம்.

என்னடா இது ஆழிக்காற்றாய், ஊழிக் கடலாய், சுனாமியாய் பொங்கி வரும் எழுத்து தாகத்தோடு திரிந்த நண்பரிடமிருந்து ஒரு தகவலும் இல்லியே, ஒரு வேளை, அவங்க மேலிடத்திலேர்ந்து அனுமதி கிடைக்கலியோன்னு யோசிச்சு கூப்பிட்டேன். இல்லடா பிளாக் ஆரம்பிக்கிறது அலுவலகத்தில் இருந்தா இல்லை வீட்டில் இருந்தான்னு தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்னார் குடுகுடுப்பை.

அட போடா. எங்க இருந்து ஆரம்பிச்சா என்ன? அலுவலகம்னா கொஞ்சம் வசதி - ஒரே ஒரு மேலாளர் தான். (வீட்டிலன்னா பொண்டாட்டி பிள்ளைன்னு ரெண்டு மேலாளர்). அலுவலகம்னா வேலை அவ்வளவா இருக்காது (வீட்டில அத்த எடு, இத்த வை, சொல்லிக் கொடு, சொறிஞ்சி விடுன்னு குடும்பிக்கு பல வேலை). அலுவலகம்னா ஒண்ணுக்கு ரெண்டுக்கு போறது, டீ, காப்பிக்கு போறது, யாராச்சும் டெஸ்க் பக்கம் வரும் போது பிசியா இருக்குற மாதிரி பம்முறதுன்னு போக மிச்ச நேரம் இருக்கும். (வீட்டுல குடும்பி வேலை எல்லாம் முடிச்சி கொஞ்சம் கம்ப்யூட்டர்ல உட்காரப் போகும் போது தான் எவனாச்சும் போன் பண்ணுவான், இல்லை ஏதாச்சும் ஒரு ரூம் ரொம்ப நாளா க்ளீன் பண்ணாம கிடக்குறது நம்ம மேலிடத்து கண்ணுக்கு படும், இல்லை அரகர சிவசிவான்னு மசமசன்னு ஒரு தூக்கம் கண்ணை அசத்தும்). இப்படி இன்ன பிற வசதி வாய்ப்புகள் பற்றி பேசி அவரை இன்னும் கொஞ்சம் கொசப்பி போனை வைச்சாச்சு.

அதுக்கு அடுத்த நாளே குடுகுடுப்பை கூப்பிட்டு சொல்றார். டேய் பிளாக் போட்டாச்சு. படிச்சி பாருன்னு. சும்மா ஜிவ்வுன்னு ஆயிருச்சு. இருக்காதா பின்னே? ஒரு வேளை இவன் பெரிய எழுத்தாளார் ஆகிட்டா, அவன் செத்தப்பறம் அவனோட நண்பன் நான்னு பேட்டி எல்லாம் கொடுக்க எனக்கு வசதியா இருக்கும்ல? அடுத்து அவர் சொன்ன மேட்டர் என் மனச ரொம்பவே பாதிச்சிருச்சு. என் பிளாக்கு பேரு குடுகுடுப்பைன்னார். என்னடா இப்படி ஒரு குண்ட போடுறே? என்னென்னமோ இலக்கிய தரமான பேரெல்லாம் என்கிட்ட சொன்னியேடா? அத்தெயல்லாம் உட்டுட்டு உனக்கேண்டா புத்தி இப்படி போச்சுன்னா அதெல்லாம் பின்னாடி இலக்கியத் தரமா எழுதறதுக்காக ரிசர்வ் பண்ணி வச்சிருக்கண்டா. இப்ப நான் போடுற மொக்கைக்கு இது போதும்ண்ணுட்டான். பொசுக்குன்னு போயிடுச்சி. (அப்பறம் அவரு எழுதுனத எல்லாம் பாத்தப்ப பேசாம பிச்சைக்காரன் வாந்தின்னு பிளாக்குக்கு பேரு வைக்கலாம்னு தோணிச்சு. அந்த நெனப்பு வந்த உடனேயே நான் அந்த பிச்சைக்காரன் வாந்திங்கிற பேர என் எதிர்கால இலக்கியத் தரமான எழுத்துக்களுக்காக நான் ரிசர்வ் பண்ணி வச்சிருக்கது வேற விசயம்)

டேய் டேய் இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா இல்லயா? நன்றி குடுகுடுப்பைக்கு எதுக்குன்னு சொல்லாமலே சும்மா சுத்தி சுத்தி சிங்கி அடிச்சி இழுத்துகிட்டே போறியேன்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது. குடுகுடுப்பை எழுதறத பாத்து தான் நானும் பிளாக் எழுதலாம்னு எனக்கு இன்ஸ்பிரேசன் வந்ததே. நன்றி அவருக்கு அதுக்கு தான்.

அட இவரெல்லாம் எழுதும் போது நாம ஏன் எழுதக் கூடாதுன்னு தான் இன்ஸ்பிரேசன். நான் அவர விட பெரிய ஆளு, பெரிய எழுத்தாளருன்னு நெனப்பு வேற. காரணம் வேற ஒண்ணுமில்லை. டவுசர் போடுற வயசுல எனக்கு கொஞ்சம் தகிரியம் அதிகம். தகிரியம்ன்னா ஏதோ ஓடுற பாம்ப பிடிப்பேன், தனியா ராத்திரி சுடுகாட்டு பக்கம் போய் வருவேங்கிற மாதிரி தகிரியம் எல்லாம் கிடையாது. எல்லாம் வாய் சவடால் தான். வாத்தியார் கிட்ட சந்தேகம் கேட்கிறது, அப்பவே ஊரு லைப்ரரிலே தனியா போய் உட்கார்ந்து புத்தகம் படிக்கிறது, பெருசுக ஏதாச்சும் சொன்னா எதித்து வாயாடுறது இது மாதிரி தகிரியம் தான். இந்த லட்சணத்துல எரியறதீயில எண்ணைய ஊத்தற கதையா வந்து சேர்ந்தாரையா ஒரு தமிழ் அய்யா. இவரு தான் என்னைய ஏத்தி விட்டாரு. நல்லா பேசுறேயே நம்ம இஸ்கோலு பேச்சுப் போட்டில கலந்துக்கன்னு. அதுல ஆரம்பிச்சி அவரு பேச்ச கேட்டு கவித புத்தகமெல்லாம் படிச்சி, கவிஞரா என்னை நானே கற்பனை பண்ணிக்கிட்டு இருந்ததால வந்த தலக்கனம் தான் நானு குடுகுடுப்பைய விட எழுதுறதுல ஒசத்தின்னு எண்ணம் வர காரணம்.

இதாம் இந்த வங்கொடுமைக்கு காரணம்.