கொஞ்ச நேரத்துல கூட்டத்துக்குள்ளேயே மூர்த்தி அண்ணன் ஒரு கூட்டம் சேர்த்தான். ஒரு பக்கம் உருமி மேளம், இன்னோரு பக்கம் நையாண்டி மேளம், அது மட்டுமில்லாம மரத்துக்கு மரம், மாடி வீட்டுக்கு வீடு கட்டி இருந்த குழா ரேடியோல குலவை, மாரியம்மா பாட்டு இந்த சத்தத்துல ஏதேதோ சிக்னல், ஏதேதோ தலை அசைப்புன்னு ஒவ்வொருத்தரா ஒதுங்கினோம். ஊரு பொட்டல்ல தான் இத்தன அக்குறும்பும் சத்தமும். ஊருக்கு அந்தப்பக்கம் இருக்க ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் அமைதி. மையமாய் இருக்கும் புளிய மரம் மட்டும் காற்றுக்கு தலை ஆட்டிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் பொட்ட ரங்கன், சொரப்பழம் சந்திரன், மீனாச்சி என்றழைக்கப்படும் மீனாட்சி சுந்தரம் என என் வயது பயலுகளுடன், கடைக்கார கணேசண்ணன், முசக்காது முனிய மாமா, முட்டகண்ணு அண்ணன்(பட்ட பெயர் மட்டுமே தெரியும், நிஜப் பெயர் அவரது அப்பா அம்மாவுக்கே தெரியுமா என்பது சந்தேகம் தான்), புளியமரத்தாரு ஊட்டு கேசவ மாமான்னு மூர்த்தி அண்ணன் கோஷ்டியுமாக சேர்ந்தாச்சு.
கேசவ மாமா தான் இடஞ்சொல்லியாம். அப்படின்னா அவருதாம் அன்னிக்கு பகலிலேயே அக்கம் பக்கம் இருக்குற தென்னதோப்புகள நோட்டம் விட்டு எந்த தோப்பு எந்த மரம், எந்தக் கொல, எத்தன தேங்கா முத்தலா வெடி போட பதமான்டு பாத்து வச்சிருந்தாரு. முசக்காது முனிய மாமா தான் மரமேறி. எந்த மரமாம்னாலுஞ்சரி, எந்நேரம்னாலும் சரி குரங்கு குட்டி மாதிரி சும்மா தாவி ஏறுவாருன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். முட்டக்கண்ணு அண்ணனுக்கும் கடைக்கார கணேசண்ணனுக்கும் இதும் மாதிரி தனி திறமெயெல்லாம் ஒண்ணுங் கிடையாது. இருந்தாலும் ரெண்டு பேருக்கும் சரியா டூட்டு போட்டிருந்துச்சி மூர்த்தி அண்ணன். மூர்த்தி அண்ணந்தாம் கோஷ்டி தலைவரு. அவரு என்ன பண்ணுவார்ன்னெல்ல்லாம் கேட்க முடியாது. அவரு சொல்வாரு எல்லாம் செய்வாக. அம்புட்டுதேன். கணேசன்னன் கடைல அவங்க அப்பனாத்தா இல்லாத நேரமா பாத்து கொஞ்சம் சக்கர, பொரி எல்லாம் கிளப்பிட்டு வந்து முட்டக்கண்ணு வீட்டுல ஒளிச்சி வைச்சிருந்திருக்கு. முட்டக்கண்ணு ஊட்டுல அவங்க அப்பனாத்தா தூரந்தொலவுல எங்கெனயோ கூலி வேல பாத்து கிட்ட்டிருந்ததால அவக அப்பத்தா மட்டுந்தேன். அதுக்கு பாவம் பகல்லயே பசு மாடு தெரியாது. இருட்டுல எங்கன எரும மாட காணப் போகுதுங்கிற தகிரியத்துல முட்டக் கண்ணு வீடு தான் எல்லா ஐட்டத்துக்கும் கொடோனு.
நாங்கெல்லாம் சும்மா அல்லக்கைக. சுள்ளி பொறுக்க, ஊட்டுலேர்ந்து நெருப்பெட்டி திருடியாறன்னு மத்த பசங்க எல்லாம் பம்பரமா சுத்தி வர நானு பட்டினத்து புள்ளங்கற கெத்துல சும்மா புளிய மர தூருல உட்காந்து தேமேன்னு வேடிக்கை பாத்துகிட்டு இருந்தேம். (கெத்துமில்ல ஒரு மண்ணுமில்ல, நீயி ஒரு வேலைக்கும் லாயக்கில்லேண்டு சொல்லித் தாம்லே மூர்த்தி அண்ணன் உன்னய சும்மா உட்கார வச்சிடுச்சின்னு மறு நாள் காலைல சொரப்பழம் சந்திரன் என்னுடன் சண்டை இட்ட போது சொன்னது எனக்கு இன்னும் மனதோரத்தில் கொஞ்சம் வலிக்கிறது). சரி இப்ப வெடி போட தயாரானாக. அன்னிக்கு இராத்திரி குறி கோனாரு தோட்டம். பள்ளிக்கூடத்த ஒட்டி இருக்க பெரிய தென்னந்தோப்பு. அதுக்கு ஊடால வரப்போடு நடந்து அரை பர்லாங்கு போனாக்க பெரிய கெணறும் அத்த ஒட்டி பம்பு செட்டும். பம்ப் செட்டு பக்கத்துல கூர வேய்ஞ்சு ஒரு மடம் மாதிரி. அங்கன தாம் ஊரு பெரிய புள்ளிக பகலுல ஆடு புலி ஆட்டம், சீட்டுன்னு கள கட்டும். அங்கன இருந்த பம்பு செட்டுலயே காவக்கார சங்கிலி இருப்பாரு. மத்த நாளுக்கண்ணா ஏதாச்சும் அரவங் கேட்டாலே கைல பெரிய பூண் போட்ட தடிய எடுத்துகிட்டு நாளை நமதே எம்ஜிஆர் மாதிரி வரும் அவரும் இன்னிக்கு பொங்கலை முன்னிட்டு ஊருக்குள் போயிருக்க எங்கள் படை உள்ளே நுழைந்தது.
வானத்தில் மின்னும் நட்சத்திரங்களின் ஒளி தவிர்த்து முழுக்க இருட்டு. காற்றில் ஆடும் ஓலைகள், தூரத்தில் இருந்து காற்றோடு வரும் பொங்கல் சத்தம். அடுத்து எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தன. "இதாம்டா மரம்" என கேசவ மாமா அடையாளஞ் சொன்னதும் சரசரவென முனிய மாமா மரமேறினார். அடுத்து இருட்டில் பொத் பொத்தென இரண்டு சத்தம், அடுத்து 'அய்யயோ ஆத்தே." என ஒரு சத்தமும். திரும்ப ஒரு பொத். மொத்த கூட்டமும் சத்தம் போட்ட ரங்கனை சுற்ற, சரசரவென முனிய மாமா இறங்கி கூட்டத்தில் கலந்தார். பொட்ட ரங்கன் தலையில் விழுந்தது நல்ல வேளையாக ஒரு முத்திய நெத்து தான். முனிய மாமா பறித்த தேங்காய்களை எல்லாம் நாங்கள் இல்லாத இடத்தில் தான் போட்டார். பாவம் பொட்ட ரங்கன் கெட்ட நேரம் ஒரே ஒரு நெத்து மட்டும் மாமா கை பட்டு தவறி அவன் தலையில் விழுந்து விட்டது. ஆளுக்காள் முதலுதவி. இருட்டில் யார் தலையை யார் தேய்க்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் யாரோ என் தலையை அழுத்தி அழுத்தி தேய்த்து வேறு விட்டார்கள். (வேறென்ன என் தலை தான் பொட்ட ரங்கனின் தலை என நினைத்து தான்).
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
கலக்கலா இருக்கு
கொஞ்சம் பாண்ட் பெரிசாக்கு, வோட் வெரிபிக்கேசனை தூக்கு,
வேர்ட் வெரிபிகேசனா? புள்ள இங்கிலிபீசெல்லாம் பேசுது...
Post a Comment